Wednesday, June 10, 2015

மறுபடியும் உருமாறும் இந்த ஆலமரம்

அந்த ஆலமரம் கொஞ்சம் பெரியதுதான். சின்ன வயது முதல் நான் அதனை பார்க்கிறேன். ஊரை விட்டு தெற்கே போகும் ரோட்டில் பல மரங்கள் புயலுக்கு விழுந்தபோதும், வெயிலுக்கு காய்ந்தபோதும் கொஞ்சம் கூட கலங்காமல் அதே கம்பீரத்துடன், அடிக்கும் காற்றில் அசைந்து கொண்டு அழகாய் இருக்கும் அதன் மனோபாவம் என்றும் என்னை ஈர்த்ததுண்டு. சில மருந்துக்கு தன் விழுதுகளையும், சில திருமணத்துக்கு தன் கிளைகளையும் என வாரத்திற்கு ஒருமுறை தானம் செய்தாலும் கொஞ்சம் கூட அளவில் சுருங்கி நான் கண்டதில்லை இதுவரையில்...என்னை விட வேகமாவே வளர்ந்து வருகிறது என்பதில் எனக்கு அதன் மேல் கொஞ்சம் கோபம் கூட இருந்ததுண்டு..

வருடங்கள் செல்ல செல்ல அதன் இருப்பின் விலாசம் கொஞ்சம் கொஞ்சமாய் காலத்திற்கேட்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது...நடந்துபோகும் சிலருக்கு நிழல் குடையாய், மழை பெய்யும் நேரங்களில் ஒதுங்க இடமாய் எனக்கு விவரம் தெரிந்தபோது இருந்த அது. மொட்டை வெயிலில் ஒன்றுக்கு என்று அந்த வழியில் போவோர் வருவோர் அனைவரின் அவசரத்தை கழிக்கும் இடமாய் உருமாறியபோது கொஞ்சம் வருத்தமாய் இருந்தது.

பின்னர் காவல்காரர்களுக்கு பணம் வசூலிக்கும் சுங்கமாய் நான் மோட்டார் வண்டி ஓட்ட கற்ற காலங்களில் என்னை கொஞ்சம் துன்புறுத்தியது. விவரம் தெரிந்த போது விடலைகளுக்கு தண்ணி அடிக்கும் புகலிடமாய் அது புது உருவெடுத்தபோது நான் கூட கொஞ்சம் வியந்துதான் போனேன் அதை பார்த்து..பின்னர் இளநி/பதனி விற்கும் கடையாய் ஒரு பக்கமும், தர்பூசணிகள் தற்காலிகமாக தங்கும் இடமுமாய் மறுபக்கமும் போன வருடம் உருவெடுத்த போது கொஞ்சம் வித்தியாசமாய், ஆனால் அழகாய் தான் இருந்தது.

கடந்த வாரம் எதோ விஷயமாய் அந்த பக்கம் நான் போக; ஆலம்விழுதுக்கு மஞ்சள் ஆடை உடுத்தி, பொட்டிட்டு பூவைத்து மாலையிட்டு மக்கள் கொஞ்சம் பேர் பயபக்தியுடன் பொங்கல் வைப்பதை பார்த்தவுடன் திகைத்து தான் போனேன் நான்..

இப்படி உருமாறும் ஒரு மரத்தை நான் வேறுங்கும் கண்டதில்லை..நம்பிக்கை இருக்கிறது எனக்கு; மறுபடியும் உருமாறும் இந்த ஆலமரம் ..


2 comments:

  1. அழகான தமிழ் நடை நண்பா ! படித்து ரசித்தேன் !! பள்ளி ஞாபகங்கள் வந்து சென்றன....

    ReplyDelete