Tuesday, May 26, 2015

ஆறு நூறு ரூபா நோட்டு.. அப்புறம் பத்து ரூபா..

"ஏ தங்கம்! உங்க அப்பாம்ம இருக்காவளா"என்றது ஒரு குரல்.

 இந்த அப்பாம்மக்கி வேற வேல இல்ல.. ஊருல இருக்குற பாதி சனம் இவியள தேடி வீட்டுக்கு வரும்.. தெருவுல சண்ட போடாத ஆளு கெடையாது..இந்த ஊருல தண்ணி இல்லாத காலத்துல எங்க வீட்டுல கைபம்பு இருந்துது.. தெருவே மத்தியானம் சமையல் பண்ண எங்க வீட்டுக்கு தண்ணி அடிக்க வரும்.. ஆனா மூணு நாளுக்கு ஒரு தடவ ஆத்து தண்ணி வரும்போது மட்டும் தெரு நல்லியில ஒரு சண்டை நடக்குமே சாமி, தெருவுல உள்ள அதனை குடும்ப மானமும் கப்பலேறும்.

ஆனா அடுத்த நாள் காலையில எங்க தோட்டத்துல வெளஞ்ச முருங்கக்கா.... வெயில் காலத்துல புளி, அப்புறம் மாம்பழம், வீட்டு ரோஜா பூ இப்படி ஏக போக வியாபாரமும் நடக்கும் அதே ஆட்களுடன்.சில கீரை கட்டுக்கள் இலவசமாக போகும்.. சில நேரம் இலவசமாக பப்பாளிபழம், கொடுக்காய் புளி, தௌனு, பனங்கிழங்கு வரும்.. இந்த பண்ட மாற்று முறை தெரு முனையில் கடை வச்சிருக்கிரவனுக்கு ஒரு கோவத்த கெளப்பும் பாருங்க.. அவன் என்ன பண்ணுவான்.. அவன் நாலு ரூபாய்க்கு முருங்கை வித்தா இங்க ரெண்டு ரூபாக்கு வீட்டுவாசல்ல போய் குடுக்கிறது..அதுவும் கடனுக்கு..சொன்ன நாள் அத குடுக்கலன்னா அடுத்த நாள் இன்னொரு கதை தெருவுல அரங்கேறும்.

இப்படி ஒரு ஆளு, அந்த ஆள தேடி வீட்டுக்கு வர நாலு பேரு...எரிச்சலா இருக்காதா உங்களுக்கே!

"வீட்ல ஆளு இல்ல.. எங்க போனாவன்னு எனக்கு தெரியாது" என்றேன் நான்

"ஒண்ணுமில்ல மணி.. இந்த மாசம் வாடகை குடுக்கல.. உங்க பழைய வீட்டிலதான் இருக்கேன் சொன்னது அந்த ஆளு..இந்தா தங்கம் குடுத்திரு உங்க அப்பாம்ம கிட்ட" என்றதும் வாங்கிக்கொண்டேன்

கொஞ்சம் லேசான வேல தான்... இல்லனா யாரு குடுத்தானு நான்அடையாளம்  சொல்றதுக்குள்ள எனக்கு தொண்டை அடைக்கும்....எண்ண தொடங்கினேன்.. ஆறு நூறு ரூபா நோட்டு..அம்பது ரூபா..அப்புறம் கொஞ்சம் இருபது ரூபா நோட்டு... அதுக்கும் அப்புறம் பத்து ரூபா.. மழை நேரம்கிரதால ஒண்ணு இன்னொன்னு மேல ஓட்டிகிட்டு வரவே இல்லை.. அதற்க்கு மேல் எண்ண எனக்கு பிடிக்கவில்லை.ஒட்டி கொண்டிருந்த அந்த பத்து ரூபா நோட்டுக்கள் தான் உண்மையான காரணம்...சரி.. குடுதிடறேன்னுட்டு.. நான் கொண்டு வந்து மேசை மேல வச்சிட்டேன்.. அந்த பொம்பள திரும்ப வந்து "எ மணி.. கொஞ்சம் மறுபடி ஒரு தடவ எண்ணி பாத்திறேன்.. காசு விசயத்துல என்னைக்கும் கண்ணும் கருத்துமா இருக்கணும்" என்றதும்.. மறுபடி எண்ண தொடங்கினேன் மனதுக்குள் திட்டி கொண்டே!

ஐநூறு ரூபாய்க்கு நூறு ரூபா நோட்டு...அப்புறம் ஒரு அம்பது ரூபா.. கொஞ்சம் இருபது ரூபா நோட்டு..அப்புறம் பாத்து ரூபா.. மொத்தத்தில் தொண்ணூறு.. அட கருமமே என் தமிழில் தீயை வைக்க.. தொள்ளாயிரம்... ஆம்... தொள்ளாயிரம் ரூபாய்..

"வாடகை எவ்ளோவு.? ஆயிரம் தானே.. நீங்க என்ன தொள்ளாயிரம் ரூபா குடுத்துருக்கிய?" என்றதும் அந்த ஆளுக்கு தூக்கி வாரி போட்டிருக்க வேண்டும்..முகத்தில் அப்படி ஒரு ஆச்சரியம்..

"இல்லையே.. சரியாய் தானே.. இருந்துது" என்ற அவரிடம்.

"இல்லையில்ல" என்று நான் சொல்ல.

"என் மவ தான் எண்ணனுனா... சரி நான் கொண்டு வாரேன்" என்று சென்றது.

நூறு ருபாய் வந்து சேர்ந்து விட்டது உடனடியாய்.... எனக்கு ஒரு நிம்மதி... அந்த பெண்ணுக்கு ஒரே குழப்பம் போல.. இன்னும் தெளியவில்லை என்பது பார்த்த நொடியில் தெரிகிறது..

ஒரு மனதிருப்தி... இனிமேல் பணத்தை எண்ணாமல் வாங்க கூடாது.. எனக்கு நானே அறிவுரை கூறி கொண்டேன்.

அடுத்த நொடி நான் முக நூலில். இருந்தாலும் என் மனம் இன்னும் அடங்க வில்லை.. நடந்ததை அசை போட்டு கொண்டிருந்தது.

என் மனதில் ஓடுகிறது வார்த்தை ரயில்.."அப்பாம்ம..வாடகை வீடு..ஆயிரம் ரூபா வாடகை..ஆறு நூறு ரூபா நோட்டு.. ஆமாம் ஆறு நூறு ரூபா நோட்டு அல்லவா நான் எண்ணினேன் முதல்முறை. எப்படி ஐந்தானது?"

தலையை சொரிந்து நான் யோசிக்கையில்... என் காலுக்கு அருகில் ஒரு நூறு ரூபா நோட்டு காற்றில் மெல்ல அசைகிறது. 

"அடச்சே!"... நான் முதலில் பணத்தை மேஜையில் வைத்த போது காற்றில் கீழே விழுந்திருக்க வேண்டும்..நெஞ்சு படபட வென்று அடித்து கொண்டது.. வேர்த்து கூட விட்டது.

நான் ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை தான் ஆனாலும்.. எப்படி இப்படி ஒரு தப்பு செய்தேன்? கணக்கில் வாங்கிய நூறு எல்லாம்என் கண் முன் வந்து சிரிக்கின்றன.. விறுவிறுவென நடந்தேன்..

வீட்டு வாசலில் அந்த பெண் தலையில் கை வைத்து உட்கார்திருக்க.. அவள் மகள் "நான் எண்ணி தான் குடுத்தேன் உன்கிட்ட... போறே வழியில நீ தான் தொலசிருக்கணும்" என்று வசைபாடி கொண்டிருக்க... உள்ளிருந்து மகன் "அத விட்டு தள்ளுங்க.. அடுத்த காரியத்த பாருங்க ரெண்டு பேரும்" என்று கொஞ்சம் சத்தம் போட.. கொஞ்சம் வெட்கமாக தான் இருந்தது என் தவறை நான் சென்று ஒப்பு கொள்ள, வேகமாய் போய் நின்று.. அதை விட வேகமாய் கதையை சொல்லிவிட்டு ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு... அதே வேகத்தில் திரும்ப நடக்கிறேன்..

இப்போது வேர்க்கவில்லை.. அந்த படபடப்பும் என்னிடம் இல்லை.. இந்த வேகம் அமைதியை தருகிறது.

ஒருநாள் இதை பற்றி நான் நினைக்கையில் கண்டிப்பாக சிரிப்பு வரும் என மனம் சொல்கிறது.. அடுத்த நொடி எனக்கு சிரிப்பு முட்டி கொண்டு வருகிறது.. ஒரு வேளை அந்த ஒரு நாள் இன்று தான் போலும்..


பின் குறிப்பு:

திருநெல்வேலி பேச்சு வழக்கில்...
அப்பாம்ம - அப்பாவின் அம்மா!

Wednesday, May 13, 2015

ரயில்கள் கூடும் எக்மோர் ரயில் நிலையம்

அனல் காத்து, நல்ல வெயில், கையிலே ஒரு பிஸ்லேரி தண்ணீர் பாட்டில்,புழுங்கியதால் மணிகட்டை உறுத்தும் கைகடிகாரம், வேர்வையில் நனைந்த சட்டை, ஒரு ஞாயிறு மதியம், ரயில்கள் கூடும் எக்மோர் ரயில் நிலையம் இவற்றுகிடையில் நான்..இதுவே கதை களம்..

கூகூ...கூகூஊன்...கூகூ...ஊன்...இந்த சப்தம்.. இருந்த சப்தங்களை அவ்வப்போது தன்னுள் வாரிபோட்டு கொண்டது..தடக் தடக் என்ற ஒலி ஒரு அழகான இசை போல ஒருசேர்ந்து கேட்க.. அவ்வப்போது தடக் தட்தட்தட் என கொஞ்சம் பிரச்சனை பண்ண..ஒரு சின்ன சலனம் நெஞ்சில் எழுந்து உடன் மறைவது போல இந்த ஓசையும் பின்னர் காணாமல் போனது....இந்த எக்மோர் ரயில் நிலையம் ரொம்ப மாறவில்லை நான் பார்த்த இந்த எட்டு ஆண்டுகளில்..ஆனால் நான் முதலில் பார்த்தபடியும் இல்லை. மாற்றங்களை தனதுடையதாக்கி தன்மை மாறாமல் இருக்கும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

இவ்வாறான இடத்தில மக்கள் வேகமாய் தங்கள் உடமைகளை தூக்கி கொண்டு ஓடும் அந்த நடை பாதையில் ஒரு உருவம்.. கிழ உருவம்தான்....மல்லாக்க படுத்திருக்கிறது....ஒரு எண்பது வயதிருக்கலாம்.. மேல் சட்டையில்லை.. இடுப்பில் வெட்டி.. இடையில் ஒரு துண்டு... சவரம் செய்து பல மாதம் ஆன ஒரு முகம்.. வெள்ளை முடி அதில்  கொஞ்சம் கருப்பு இன்னும் மிச்சமிருக்கிறது.ஒரு பத்து பதினைந்து ஈக்கள் மொய்க்க கொஞ்சம் கூட சலனமில்லாமல் ஒரு தூக்கம் அந்த ஆளுக்கு..கோபம் பொத்துகொண்டு வந்ததது எனக்கு இருந்தாலும் ஒரு புறம் அந்த ஆளின் அந்த நிம்மதியான தூக்கத்தை நினைத்து ஒரு வகையில் கொஞ்சம்  பொறாமையும் கூட..தூக்கம் அவரின் ஒரே சொத்தாக கூட இருக்கலாம் என்று நினைத்து கொண்டேன்..

ஒரு காலத்தில் எக்மோரை  பார்த்து பிரமித்தது உண்டு..உயர்ந்த கட்டடம்..சிவப்பு சுவர்கள்... விரிந்த கூரை..அகண்ட நடைமேடைகள்,அந்த மர படிகட்டுகள் என.. கொஞ்சம் சிலிர்ப்பூட்டிய  இடம்தான்.. பின்னர் கொஞ்ச நாளில் பழகி போய்விட்டது..அதன் பின் ரொம்ப அலட்டிகொண்டதில்லை இந்த இடத்தை பற்றி..மனிதர்கள் கூட இப்படித்தான்.. முதல் சந்திப்பில் எப்போதுமே ஒரு பிரம்மாண்டம்.. பின்னர் பழகி போன பின் அந்த பிரம்மாண்டம் தெரிவதில்லை.. ஆனால் பிரிந்து சென்று சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது தெரியும் ஒரு பிணைப்பு....இன்று என்னவோ கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறது.. எனக்குள் இந்த இடத்துடன் ஒரு தொடர்பு இருக்கிறதென்று.. எதோ என்னுடையது என்ற ஒரு பந்தம் புலப்படுகிறது..அரசாங்க சொத்தில் ஆசை படுபவன் என்று நீங்கள் எடுத்து கொண்டாலும் நான் அதை பற்றி கவலை கொள்ள போவதில்லை இந்த விஷயத்தில்...இவ்வாறு நான் என் நினைவுகளையும் மற்றும் பல தேவையற்ற விஷயங்களையும் கிழ மாடு போல மெல்ல அசை போட்டுகொண்டிருக்கும் போதுதான் மறுபடியும் என் கண்ணில் பட்டது அந்த உருவம்..

அதே உருவம் தான்.. கொஞ்சம் கூட அசைந்தபாடில்லை.. அப்படியே.. அத்தனை சத்தங்களின் நடுவிலே.. ஒரு நொடியில் மனம் திக்கென்றது.. ஒரு வேளை.. அப்படியிருக்கலாமோ.. ஆம் கொஞ்சம் கூட அசைவில்லை..கூர்ந்து கவனிக்கிறேன்.. நெஞ்சு கூட்டில் ஒரு ஏற்ற இறக்கம்?? ஊஹும்.. ஒன்றும் இல்லை..வயிறு உப்பி பின் தன்னிலை அடைகிறதா என்று கூட கவனிக்கிறேன்.. ஒன்றும் இல்லை..இத்தனை ஈக்கள் மொய்த்தும் கொஞ்சம் கூட உடலில் ஒரு உணர்ச்சி இல்லையென்றால்.. என்னவோ.. மனம் பதறுகிறது.. கண்டுகொள்ளாமல் இருந்து விட்டால் என்ன? நாம் மட்டுமா இங்கு இருக்கிறோம்?  அனைவரும் தத்தம் வேலைகளில் உள்ளபடி நானும் இருந்தால் என்ன? சுற்றும் முற்றும் கவனிக்கிறேன் இப்போது.. வேறு எவராவது கவனிக்கிறார்களா என்று... எனக்கு அடுத்த பெஞ்சில் அமர்திருக்கும் ஒரு நாற்பது வயது சக பயணியும் என்னை போல் கூர்ந்து நோக்கி கொண்டிருக்கிறார்..ஒரு வகையில் மனதுக்கு சந்தோசம்..தம்பி உயிர் இல்லையோ ஒரு வேளை என்று அந்த பெண்மணி என்னை பார்த்து கேட்டதும் தூக்கி போட்டது எனக்கு..என்னை கவனித்திருக்க வேண்டும். நான் குற்றம் செய்யவில்லை என்ற போதும் எதோ நான் எதோ தவறு செய்து மாட்டிகொண்ட ஒரு பயம் எனக்கு..நாக்கு பிறழ்கிறது.. பயம் தொற்றிகொள்கிறது.. இந்த ஜனகூட்டதின் நடுவே இந்த உடல் என்னை பதற வைக்கிறது..

தெரியவில்லை என்று நான் சொல்ல துவங்கும் நேரம் அந்த கிழவன் தன் கையை எடுத்து இடுப்பில் சொரிய.. அந்த பெண்மணி சிரிக்கிறார் சத்தமாய்.. என்னை அறியாமல் ஒரு புன்னகை என் இதழ்களில்..நம்ம வருத்தமில்லாமல் ரயில் ஏறலாம் தம்பி... கொஞ்சம் கவலையாய்தான் இருந்தது என்று அந்த அம்மா சொல்லும்போதுதான்  என் மனம் அமைதியாகிறது....

கூகூ...கூகூஊன்...கூகூ...ஊன்....தடக் தடக்..என அடுத்த ரயில் வண்டி புறப்பட தயாராகிறது..நான் என் வண்டிக்காக காத்திருக்கிறேன்... 


Tuesday, May 12, 2015

காபி குடிக்க வேண்டும் என்று என் கால்கள் சொல்கிறது.

காபி டேயில் காப்புசினோவை ரசித்து முடித்து, உருகி நின்ற சாக்லேட் பாண்டஸி கேக்கை நண்பர்களுடன் கொஞ்சம் ருசித்து முடித்து, அவர்களை அங்கே கழட்டிவிட்டு விட்டு ...ம்...இல்லை...ஒரு சந்தேகம்.. ஒரு வேளை..அவர்கள் என்னை கழட்டி விட்டார்களோ? இப்போ நெனைச்சு பார்த்தா புரியவில்லை..சரி எதோ ஒன்று!! சில தருணங்கள் வாழ்வில் சம்பவங்கள் இப்படித்தான்.. அவை நடந்த பின்னும் புரிவதில்லை என்றும்..புரட்டி பார்த்தால் பல முடிச்சுகள் இப்படி தான் இருக்கும் அவிழாமல்..ரொம்ப யோசிக்காமல் அங்கிருந்து அடுத்த நிறுத்தம் எக்ஸ்பிரஸ் அவெனு!

மொட்டை வெயிலில் ஊரு சுத்தணும்ன்னு முடிவு பண்ணிட்டா ஒரு பில்டிங்குள்ள இல்லனா ஒரு கடைக்குள்ள இருந்தா தான் உயிரோட இருக்க முடியும் நம்ம சென்னையில..... எக்ஸ்பிரஸ் அவெனுவில் உட்கார இடமில்லாது ஒரு கடை விடாது சுற்றி..கடைசியில் பரிஸ்டாவில் இடம் இருப்பதை மூன்றாவது மாடியில் இருந்து கவனித்து... விரைந்து சென்று அந்த இடத்தை பிடித்து கொண்டு..ஒரு கிரீன் ஆப்பிள் மொஜிடோ வாங்கி  ரசித்து ருசித்து...இல்லை! இல்லை!....அதனை என் கால்கள் அனுபவித்து குடிக்க ஒரு ஒரு மணிநேரம் ஆனது.. கடைக்காரன் என்னை திட்டாத குறை.. என்னவோ தெரியவில்லை அந்த இடம் ரொம்ப பிடித்து போக.. ஒரு சிக்கன் கிரில்லுடு சான்ட்விச் இப்போது வாங்கினேன்...மறுபடியும் ஒரு ஒரு மணி நேரம் எடுத்தது ஏன் என்ற கேள்விக்கு விடை என் கால்கள்தான் சொல்ல வேண்டும்.. அவற்றுக்கு வாய் இருந்தால் ஒப்பாரி வைத்திருக்கும்...பதில் எங்கே சொல்லும்..சரி விஷயத்திற்கு வருவோம்..

கடைசியில் நான் ஒரு வழியாய் பரிஸ்டாவில் ..அட என்னங்க.. சுவாரசியமாய் எதாவது நீங்கள் எதிர் பார்த்தால் அது உங்கள் தவறு...காதல் ஜோடிகள் தான் காபி ஷோப்பில் நேரம் கழிக்க முடியும் என்றெல்லாம் ஒன்றுமல்ல..தனியாய் கூட நேரம் கழிக்க முடியும்...தனிமை தரும் இன்பம்கூட அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் புரியும்...அந்த தனிமை தரும் சுதந்திரம் மற்றும் அதன் சகவாசம் ஒரு நல்ல பூத கண்ணாடி..

ஆமாங்க நீங்க கவனிச்சதில்ல.....என கண்களில் தெரிவது...முதல் முறை ஹைஹீல்ஸ் போட்ட பொண்ணுங்க,கையில் காசில்லாமல் சுற்றும் பசங்க,கேட்டது கிடைத்த சந்தோஷத்தில் சில குழந்தைகள்.. ஆம்..வெற்றி களிப்பில்..கொஞ்சம் கோபத்தோடு போரில் தோற்ற தொனியில் இன்னும் சில குட்டி பிசாசுகள் பழி வாங்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு...ஹா ஹா!.
கவலையின்றி கட்டி பிடித்து கொண்டு போகும் இளம் காதல் ஜோடிகள், ஒரு அடி தூரம் விட்டு நடத்து வரும் தம்பதிகள்..அட என்ன பிரச்சனையோ.., வாஞ்சையோடு கைகோர்த்து வரும் தாத்தா பாட்டிகள்..இதை விட்டால்..ஓடும் குழந்தை, பரபரக்கும் மைபோட்ட கண்கள், கண்கொட்ட மறந்த பசங்க, கூந்தலை நொடிக்கொரு முறை கோதிவிடும் பெண்கள், பத்து பேர் தன்னை பார்க்க வேண்டும் என்ற நடை சிலருக்கு, தன்னை எவரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்ற மௌனம் இன்னும் சிலருக்கு, ஆம்.. ஒளிந்து கொள்கிறார்கள் தங்களுள் தாங்களாகவே. சில புன்னகைகளை புரிந்து கொண்ட சிலர், அதில் குழம்பி போன சிலர், அப்புறம் கவிழ்ந்த கப்பலாய் ஒன்றிரெண்டு.. இதை விட்டால் என்னை போல் தனிமையை அனுபவிக்கும் ஒரு சிலர்..இவ்வாறு...உணர்ச்சிகளை கொட்டுகிறார்கள்.. சொட்ட சொட்ட நனைகிறேன் நான்..பலர் இதனை புரிந்து கொள்வதில்லை..இல்லை படிக்க முற்படுவதில்லை... இவர்கள் உணர்சிகளை படிக்க படிக்க மூச்சு முட்டுகிறது....

நல்ல வேளை நான் எதிர்பார்த்த அழைப்பும் வந்து விட்டது.. நீந்தி செல்கிறேன் நான்..மக்கள் கூட்டத்தில் என்பார்கள் சிலர்.. இல்லையில்லை.. உணர்ச்சி வெள்ளத்தில்.. என் மனம் வேறெங்கோ அலைபாய கொஞ்சம் கொஞ்சமாய் இந்த வெள்ளம் வற்ற தொடங்கியது.. இப்போது நடக்கிறேன்.. கால்கள் வலிக்கின்றன மறுபடியும்.. உட்கார இடம் தேடவேண்டும் என என் மனம் சொல்கிறது.. காபி குடிக்க வேண்டும் என்று என் கால்கள் சொல்கிறது...இவர்கள் இருவர் பேச்சையும் கேட்க போகிறேன் நான்..

Tuesday, May 5, 2015

எங்க வீட்டுல கயிறறுப்பு!

"பள்ளிகூடத்தில் நண்பன் கொடுத்தது.  திருப்பதி கயிறுண்ணான்.. எனக்காக வாங்கினதுண்ணான்... கையில கட்டி விட்டான்." கருப்பு கயிறு கதையை சொல்லி முடித்தேன் வேகமா... இதுக்கு ஒரு சிரிப்பு... இப்போ கொஞ்சம் சத்தமா..  வேற யாரு தாத்தாதான்... ஜுன்கிள் புக் ஓடுகிறது டிடியில்... எனக்கு அதை விட்டுவிட கூடாதென்ற ஆர்வம்... எத்தனை படிக்கிற? "மூணாவது முடிச்சிட்டேன்!" இந்த பதிலை சொல்வதில் எனக்கு அப்படி ஒரு சந்தோசம்.

என் கையை எடுத்து தடவி பார்த்தார்..  "இங்க பாரு உன் பையன் கையில கண்ட கயிற கட்டி இருக்கான்.. சாமி கையிராம்.. ரொம்ப இறுக்கமா வேற.. அழுக்கு சேரும் அந்த எடத்துல.. "தாத்தா சொன்னதுக்கு பதில் வரவில்லை.. கேட்டு கொண்டு இருந்தார்கள் அம்மாவும் சித்திகளும்..மறுத்தோ எதிர்த்தோ பேசி இருந்தால் தானே வாழ்நாளில்.... கயிறை தடவிக்கொண்டார்.. மறுபடியும்.. ஒரு விரல் விட்டு பார்த்தார் கயிறுக்கும் என் கைக்கும் இடையில்.. "ஆமா இறுக்கமாதான் இருக்கு.. தண்ணி பட்டா இன்னும் இறுகும்."அவரே முனகி கொண்டார்..

 எனக்கு இந்த ஜுன்கிள் புக்கில் வருவது போல் காட்டில் வாழ வேண்டும்.. ச்ச.. மரம் விட்டு மரம் தாவி..எவ்ளோ அழகா கொரங்கு கூட சேர்ந்து... இங்க மச்சியிலே ஓட்டு மேல ஏறுனாலே திட்டு விழுது.. ஒரு மரத்துல ஏற விடுவாங்களா... விட  மாட்டாங்க..கொய்யா மரத்துல ஏறி நான் வாங்குன திட்டு எனக்கு தான் தெரியும்..என் கவலை எனக்கு.... அப்போதுதான் நடந்தது அது..தாத்தாவின் சாவிகொத்தில் இருக்கும் கத்தி  அழகாய் கயிறை அறுத்தேறிந்தது...

"சாமியாம் சாமி..அழுக்கு செருறதுக்கு ஒரு காரணம் வேற....படிக்கிற பிள்ளைகளே இப்படி இருந்தா.. மத்த ஜனம் எப்படி இருக்கும்..."தாத்தாவின் வார்த்தைகள் இன்னும் கேட்கிறது....இது எங்க வீட்டுல நடந்த கயிறறுப்பு! 

கல் தானே நீ

கண்ணுக்கெதிரே களவு
காத தூரத்தில் கற்பழிப்பு
ஆலமரத்தடியில் ஆற்றங்கரையில்
குளத்தங்கரையில் தெருச்சந்தியில்
வாகன முகப்பில் வயல்வெளி ௮ருகில்
ராப்பகலாக நீ ௮மர்ந்திருந்தும்
ஓலச்சத்தம் கேட்கிறது ௭ங்கும்
கண் திறந்து கண்டிக்கவில்லையேனில்
கருங்கல் தானே நீ???
எவ்வாறு கடவுளானாய்!!!

உன் கண்களின் கைதியடி நான்

நீலவானம் அதில் கவலையின்றி உலவும் மேகம்
உயர்ந்த மலைகள் அதில் செழித்து படர்ந்த மரங்கள்
இவை அனைத்தையும் விழுங்கும் உன் கண்கள்
வியப்பின் எல்லையில் நீ, இறையவன் படைப்பில் நான்..
ஆனால் சட்டென திரும்பும் அந்த கணபொழுதில்
உன் கண்களின் கைதியடி நான்!