Tuesday, May 12, 2015

காபி குடிக்க வேண்டும் என்று என் கால்கள் சொல்கிறது.

காபி டேயில் காப்புசினோவை ரசித்து முடித்து, உருகி நின்ற சாக்லேட் பாண்டஸி கேக்கை நண்பர்களுடன் கொஞ்சம் ருசித்து முடித்து, அவர்களை அங்கே கழட்டிவிட்டு விட்டு ...ம்...இல்லை...ஒரு சந்தேகம்.. ஒரு வேளை..அவர்கள் என்னை கழட்டி விட்டார்களோ? இப்போ நெனைச்சு பார்த்தா புரியவில்லை..சரி எதோ ஒன்று!! சில தருணங்கள் வாழ்வில் சம்பவங்கள் இப்படித்தான்.. அவை நடந்த பின்னும் புரிவதில்லை என்றும்..புரட்டி பார்த்தால் பல முடிச்சுகள் இப்படி தான் இருக்கும் அவிழாமல்..ரொம்ப யோசிக்காமல் அங்கிருந்து அடுத்த நிறுத்தம் எக்ஸ்பிரஸ் அவெனு!

மொட்டை வெயிலில் ஊரு சுத்தணும்ன்னு முடிவு பண்ணிட்டா ஒரு பில்டிங்குள்ள இல்லனா ஒரு கடைக்குள்ள இருந்தா தான் உயிரோட இருக்க முடியும் நம்ம சென்னையில..... எக்ஸ்பிரஸ் அவெனுவில் உட்கார இடமில்லாது ஒரு கடை விடாது சுற்றி..கடைசியில் பரிஸ்டாவில் இடம் இருப்பதை மூன்றாவது மாடியில் இருந்து கவனித்து... விரைந்து சென்று அந்த இடத்தை பிடித்து கொண்டு..ஒரு கிரீன் ஆப்பிள் மொஜிடோ வாங்கி  ரசித்து ருசித்து...இல்லை! இல்லை!....அதனை என் கால்கள் அனுபவித்து குடிக்க ஒரு ஒரு மணிநேரம் ஆனது.. கடைக்காரன் என்னை திட்டாத குறை.. என்னவோ தெரியவில்லை அந்த இடம் ரொம்ப பிடித்து போக.. ஒரு சிக்கன் கிரில்லுடு சான்ட்விச் இப்போது வாங்கினேன்...மறுபடியும் ஒரு ஒரு மணி நேரம் எடுத்தது ஏன் என்ற கேள்விக்கு விடை என் கால்கள்தான் சொல்ல வேண்டும்.. அவற்றுக்கு வாய் இருந்தால் ஒப்பாரி வைத்திருக்கும்...பதில் எங்கே சொல்லும்..சரி விஷயத்திற்கு வருவோம்..

கடைசியில் நான் ஒரு வழியாய் பரிஸ்டாவில் ..அட என்னங்க.. சுவாரசியமாய் எதாவது நீங்கள் எதிர் பார்த்தால் அது உங்கள் தவறு...காதல் ஜோடிகள் தான் காபி ஷோப்பில் நேரம் கழிக்க முடியும் என்றெல்லாம் ஒன்றுமல்ல..தனியாய் கூட நேரம் கழிக்க முடியும்...தனிமை தரும் இன்பம்கூட அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் புரியும்...அந்த தனிமை தரும் சுதந்திரம் மற்றும் அதன் சகவாசம் ஒரு நல்ல பூத கண்ணாடி..

ஆமாங்க நீங்க கவனிச்சதில்ல.....என கண்களில் தெரிவது...முதல் முறை ஹைஹீல்ஸ் போட்ட பொண்ணுங்க,கையில் காசில்லாமல் சுற்றும் பசங்க,கேட்டது கிடைத்த சந்தோஷத்தில் சில குழந்தைகள்.. ஆம்..வெற்றி களிப்பில்..கொஞ்சம் கோபத்தோடு போரில் தோற்ற தொனியில் இன்னும் சில குட்டி பிசாசுகள் பழி வாங்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு...ஹா ஹா!.
கவலையின்றி கட்டி பிடித்து கொண்டு போகும் இளம் காதல் ஜோடிகள், ஒரு அடி தூரம் விட்டு நடத்து வரும் தம்பதிகள்..அட என்ன பிரச்சனையோ.., வாஞ்சையோடு கைகோர்த்து வரும் தாத்தா பாட்டிகள்..இதை விட்டால்..ஓடும் குழந்தை, பரபரக்கும் மைபோட்ட கண்கள், கண்கொட்ட மறந்த பசங்க, கூந்தலை நொடிக்கொரு முறை கோதிவிடும் பெண்கள், பத்து பேர் தன்னை பார்க்க வேண்டும் என்ற நடை சிலருக்கு, தன்னை எவரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்ற மௌனம் இன்னும் சிலருக்கு, ஆம்.. ஒளிந்து கொள்கிறார்கள் தங்களுள் தாங்களாகவே. சில புன்னகைகளை புரிந்து கொண்ட சிலர், அதில் குழம்பி போன சிலர், அப்புறம் கவிழ்ந்த கப்பலாய் ஒன்றிரெண்டு.. இதை விட்டால் என்னை போல் தனிமையை அனுபவிக்கும் ஒரு சிலர்..இவ்வாறு...உணர்ச்சிகளை கொட்டுகிறார்கள்.. சொட்ட சொட்ட நனைகிறேன் நான்..பலர் இதனை புரிந்து கொள்வதில்லை..இல்லை படிக்க முற்படுவதில்லை... இவர்கள் உணர்சிகளை படிக்க படிக்க மூச்சு முட்டுகிறது....

நல்ல வேளை நான் எதிர்பார்த்த அழைப்பும் வந்து விட்டது.. நீந்தி செல்கிறேன் நான்..மக்கள் கூட்டத்தில் என்பார்கள் சிலர்.. இல்லையில்லை.. உணர்ச்சி வெள்ளத்தில்.. என் மனம் வேறெங்கோ அலைபாய கொஞ்சம் கொஞ்சமாய் இந்த வெள்ளம் வற்ற தொடங்கியது.. இப்போது நடக்கிறேன்.. கால்கள் வலிக்கின்றன மறுபடியும்.. உட்கார இடம் தேடவேண்டும் என என் மனம் சொல்கிறது.. காபி குடிக்க வேண்டும் என்று என் கால்கள் சொல்கிறது...இவர்கள் இருவர் பேச்சையும் கேட்க போகிறேன் நான்..

No comments:

Post a Comment