Tuesday, May 26, 2015

ஆறு நூறு ரூபா நோட்டு.. அப்புறம் பத்து ரூபா..

"ஏ தங்கம்! உங்க அப்பாம்ம இருக்காவளா"என்றது ஒரு குரல்.

 இந்த அப்பாம்மக்கி வேற வேல இல்ல.. ஊருல இருக்குற பாதி சனம் இவியள தேடி வீட்டுக்கு வரும்.. தெருவுல சண்ட போடாத ஆளு கெடையாது..இந்த ஊருல தண்ணி இல்லாத காலத்துல எங்க வீட்டுல கைபம்பு இருந்துது.. தெருவே மத்தியானம் சமையல் பண்ண எங்க வீட்டுக்கு தண்ணி அடிக்க வரும்.. ஆனா மூணு நாளுக்கு ஒரு தடவ ஆத்து தண்ணி வரும்போது மட்டும் தெரு நல்லியில ஒரு சண்டை நடக்குமே சாமி, தெருவுல உள்ள அதனை குடும்ப மானமும் கப்பலேறும்.

ஆனா அடுத்த நாள் காலையில எங்க தோட்டத்துல வெளஞ்ச முருங்கக்கா.... வெயில் காலத்துல புளி, அப்புறம் மாம்பழம், வீட்டு ரோஜா பூ இப்படி ஏக போக வியாபாரமும் நடக்கும் அதே ஆட்களுடன்.சில கீரை கட்டுக்கள் இலவசமாக போகும்.. சில நேரம் இலவசமாக பப்பாளிபழம், கொடுக்காய் புளி, தௌனு, பனங்கிழங்கு வரும்.. இந்த பண்ட மாற்று முறை தெரு முனையில் கடை வச்சிருக்கிரவனுக்கு ஒரு கோவத்த கெளப்பும் பாருங்க.. அவன் என்ன பண்ணுவான்.. அவன் நாலு ரூபாய்க்கு முருங்கை வித்தா இங்க ரெண்டு ரூபாக்கு வீட்டுவாசல்ல போய் குடுக்கிறது..அதுவும் கடனுக்கு..சொன்ன நாள் அத குடுக்கலன்னா அடுத்த நாள் இன்னொரு கதை தெருவுல அரங்கேறும்.

இப்படி ஒரு ஆளு, அந்த ஆள தேடி வீட்டுக்கு வர நாலு பேரு...எரிச்சலா இருக்காதா உங்களுக்கே!

"வீட்ல ஆளு இல்ல.. எங்க போனாவன்னு எனக்கு தெரியாது" என்றேன் நான்

"ஒண்ணுமில்ல மணி.. இந்த மாசம் வாடகை குடுக்கல.. உங்க பழைய வீட்டிலதான் இருக்கேன் சொன்னது அந்த ஆளு..இந்தா தங்கம் குடுத்திரு உங்க அப்பாம்ம கிட்ட" என்றதும் வாங்கிக்கொண்டேன்

கொஞ்சம் லேசான வேல தான்... இல்லனா யாரு குடுத்தானு நான்அடையாளம்  சொல்றதுக்குள்ள எனக்கு தொண்டை அடைக்கும்....எண்ண தொடங்கினேன்.. ஆறு நூறு ரூபா நோட்டு..அம்பது ரூபா..அப்புறம் கொஞ்சம் இருபது ரூபா நோட்டு... அதுக்கும் அப்புறம் பத்து ரூபா.. மழை நேரம்கிரதால ஒண்ணு இன்னொன்னு மேல ஓட்டிகிட்டு வரவே இல்லை.. அதற்க்கு மேல் எண்ண எனக்கு பிடிக்கவில்லை.ஒட்டி கொண்டிருந்த அந்த பத்து ரூபா நோட்டுக்கள் தான் உண்மையான காரணம்...சரி.. குடுதிடறேன்னுட்டு.. நான் கொண்டு வந்து மேசை மேல வச்சிட்டேன்.. அந்த பொம்பள திரும்ப வந்து "எ மணி.. கொஞ்சம் மறுபடி ஒரு தடவ எண்ணி பாத்திறேன்.. காசு விசயத்துல என்னைக்கும் கண்ணும் கருத்துமா இருக்கணும்" என்றதும்.. மறுபடி எண்ண தொடங்கினேன் மனதுக்குள் திட்டி கொண்டே!

ஐநூறு ரூபாய்க்கு நூறு ரூபா நோட்டு...அப்புறம் ஒரு அம்பது ரூபா.. கொஞ்சம் இருபது ரூபா நோட்டு..அப்புறம் பாத்து ரூபா.. மொத்தத்தில் தொண்ணூறு.. அட கருமமே என் தமிழில் தீயை வைக்க.. தொள்ளாயிரம்... ஆம்... தொள்ளாயிரம் ரூபாய்..

"வாடகை எவ்ளோவு.? ஆயிரம் தானே.. நீங்க என்ன தொள்ளாயிரம் ரூபா குடுத்துருக்கிய?" என்றதும் அந்த ஆளுக்கு தூக்கி வாரி போட்டிருக்க வேண்டும்..முகத்தில் அப்படி ஒரு ஆச்சரியம்..

"இல்லையே.. சரியாய் தானே.. இருந்துது" என்ற அவரிடம்.

"இல்லையில்ல" என்று நான் சொல்ல.

"என் மவ தான் எண்ணனுனா... சரி நான் கொண்டு வாரேன்" என்று சென்றது.

நூறு ருபாய் வந்து சேர்ந்து விட்டது உடனடியாய்.... எனக்கு ஒரு நிம்மதி... அந்த பெண்ணுக்கு ஒரே குழப்பம் போல.. இன்னும் தெளியவில்லை என்பது பார்த்த நொடியில் தெரிகிறது..

ஒரு மனதிருப்தி... இனிமேல் பணத்தை எண்ணாமல் வாங்க கூடாது.. எனக்கு நானே அறிவுரை கூறி கொண்டேன்.

அடுத்த நொடி நான் முக நூலில். இருந்தாலும் என் மனம் இன்னும் அடங்க வில்லை.. நடந்ததை அசை போட்டு கொண்டிருந்தது.

என் மனதில் ஓடுகிறது வார்த்தை ரயில்.."அப்பாம்ம..வாடகை வீடு..ஆயிரம் ரூபா வாடகை..ஆறு நூறு ரூபா நோட்டு.. ஆமாம் ஆறு நூறு ரூபா நோட்டு அல்லவா நான் எண்ணினேன் முதல்முறை. எப்படி ஐந்தானது?"

தலையை சொரிந்து நான் யோசிக்கையில்... என் காலுக்கு அருகில் ஒரு நூறு ரூபா நோட்டு காற்றில் மெல்ல அசைகிறது. 

"அடச்சே!"... நான் முதலில் பணத்தை மேஜையில் வைத்த போது காற்றில் கீழே விழுந்திருக்க வேண்டும்..நெஞ்சு படபட வென்று அடித்து கொண்டது.. வேர்த்து கூட விட்டது.

நான் ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை தான் ஆனாலும்.. எப்படி இப்படி ஒரு தப்பு செய்தேன்? கணக்கில் வாங்கிய நூறு எல்லாம்என் கண் முன் வந்து சிரிக்கின்றன.. விறுவிறுவென நடந்தேன்..

வீட்டு வாசலில் அந்த பெண் தலையில் கை வைத்து உட்கார்திருக்க.. அவள் மகள் "நான் எண்ணி தான் குடுத்தேன் உன்கிட்ட... போறே வழியில நீ தான் தொலசிருக்கணும்" என்று வசைபாடி கொண்டிருக்க... உள்ளிருந்து மகன் "அத விட்டு தள்ளுங்க.. அடுத்த காரியத்த பாருங்க ரெண்டு பேரும்" என்று கொஞ்சம் சத்தம் போட.. கொஞ்சம் வெட்கமாக தான் இருந்தது என் தவறை நான் சென்று ஒப்பு கொள்ள, வேகமாய் போய் நின்று.. அதை விட வேகமாய் கதையை சொல்லிவிட்டு ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு... அதே வேகத்தில் திரும்ப நடக்கிறேன்..

இப்போது வேர்க்கவில்லை.. அந்த படபடப்பும் என்னிடம் இல்லை.. இந்த வேகம் அமைதியை தருகிறது.

ஒருநாள் இதை பற்றி நான் நினைக்கையில் கண்டிப்பாக சிரிப்பு வரும் என மனம் சொல்கிறது.. அடுத்த நொடி எனக்கு சிரிப்பு முட்டி கொண்டு வருகிறது.. ஒரு வேளை அந்த ஒரு நாள் இன்று தான் போலும்..


பின் குறிப்பு:

திருநெல்வேலி பேச்சு வழக்கில்...
அப்பாம்ம - அப்பாவின் அம்மா!

3 comments:

  1. Replies
    1. தங்கள் வார்த்தைக்கு மிகுந்த நன்றி!

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete