Wednesday, June 24, 2015

சில புன்னகைகளுக்கு உடனடி விடைகள் இருந்தால் கொஞ்சம் நன்றாயிருக்கும்

சென்னையில் மழை என்பதால் மூன்று மணி நேரத்துக்கு முன் வந்து சேர்ந்தாயிற்று விமான நிலையத்திற்கு.. தில்லிக்கு முதல் பயணம்..இராவணன் என்னை அழைக்கிறான்; இலங்கைக்கு போகும் பொருட்டு புத்தகத்தினுள் நுழைய முற்படுகிறேன்.. எதோ என்னை என் கனவுலகதினுள் நுழைய விடாமல் தடுக்கிறது...குபேரன் இலங்கையை விட்டு ஓடி விட்டான்; ஒரு வழியாய் இராவணன் இலங்கையை பிடித்துவிட்டான்.கையிலிருக்கும் அந்த புத்தகம் மேல் இருந்த அந்த ஆர்வத்தை எப்படியோ தொலைத்துவிட்டேன்..இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது என் விமானம் சென்னையில் இருந்து கிளம்ப. கொஞ்சம் சுற்றி முற்றி பார்க்கிறேன்.. கண்கள் வழக்கம் போல் தேடுகின்றன.

என் கண்கள் எட்டும் தூரம் வரை ஒன்றும் பசுமையாய் தெரியவில்லை. இன்னும் இரண்டு மணிநேரம் எப்படி போகும் என்பது எனக்கு புரியவில்லை.என் மூளை எழுத்துக்களை கிரகிக்க மறுக்கிறது.என்ன செய்வதென்று புரியவில்லை..  சில நேரங்கள் கொஞ்சம் விநோதமானவை; அன்று கூட அப்படித்தான். ஒரு ஐந்து நிமிடம் கழித்து கொஞ்சம் பசுமை தலை காட்டியது..எனக்கு எதிர்த்தால் போல் வந்தமர்ந்தபோது இன்றைய நாள் இனிதாக தொடங்கும் என்று விமான நிலையத்தினுள் நுழையும் போது எங்கோ கேட்டது ஞாபகத்தில் வந்து மறைந்தது..என்ன ஒரு வேகம், பிடித்த விஷயங்களில் மனம் வேகமாக முழ்குகிறது.. ஒரு அரைமணி நேரம் ஆகி இருக்கும், புத்தகத்தில் ஒரு பக்கம் கூட நகரவில்லை..இருந்தும், புத்தகத்தில் அடுத்த பக்கம் திருப்புகிறேன்.. அந்த பக்கத்தை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்...புத்தகம் என் கை மீறி எங்கும் போகாது என்ற எண்ணம் எனக்கு.

நேரம் போனது தெரியாது.. தில்லி செல்லும் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்தாயிற்று.. காற்றடைத்த அந்த இரும்பு கூட்டுக்குள் நுழைய மனம் இல்லை; என்ன செய்வது, வருத்ததுடன் புத்தகத்தை மூடுகிறேன்.. கொண்டுவந்த பையை தோளில் மாட்டியாயிற்று. மெல்ல எழுந்து அந்த விமானத்தில் ஏறும் வாசல் நோக்கி நடக்கிறேன்..கொஞ்சம் கூட்டம் அதனால் வரிசையில் நிற்கிறேன்...சின்ன சலனம் மனதில்; மறுபடி ஒருமுறை திரும்பி பார்த்தால் என்ன என்று.. மனது கேட்பதில்லை சில விஷயங்களில்.. திரும்பி பார்க்கிறேன் மெல்ல..அந்த ஒரு பார்வை, உடனடியாய் ஒரு புன்னகை தவழ்கிறது சிறுகுறும்புத்தனத்துடன்..நான் அதை கிரகிப்பதை கண்டுகொண்டவுடன் வேகமாய் ஓடி மறைகிறது..அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு புரியவில்லை. தெரியாத மனிதர்களிடம் இருந்து, நமக்கு பரிச்சயம் இல்லாத ஒரு புதிய இடத்தில், புரியாத வகையில் வரும் இது போன்ற சில புன்னகைகளுக்கு உடனடி விடைகள் இருந்தால் என்னை போன்ற மரமண்டைகளுக்கு வாழ்க்கை கொஞ்சம் நன்றாயிருக்கும்.

Wednesday, June 10, 2015

மறுபடியும் உருமாறும் இந்த ஆலமரம்

அந்த ஆலமரம் கொஞ்சம் பெரியதுதான். சின்ன வயது முதல் நான் அதனை பார்க்கிறேன். ஊரை விட்டு தெற்கே போகும் ரோட்டில் பல மரங்கள் புயலுக்கு விழுந்தபோதும், வெயிலுக்கு காய்ந்தபோதும் கொஞ்சம் கூட கலங்காமல் அதே கம்பீரத்துடன், அடிக்கும் காற்றில் அசைந்து கொண்டு அழகாய் இருக்கும் அதன் மனோபாவம் என்றும் என்னை ஈர்த்ததுண்டு. சில மருந்துக்கு தன் விழுதுகளையும், சில திருமணத்துக்கு தன் கிளைகளையும் என வாரத்திற்கு ஒருமுறை தானம் செய்தாலும் கொஞ்சம் கூட அளவில் சுருங்கி நான் கண்டதில்லை இதுவரையில்...என்னை விட வேகமாவே வளர்ந்து வருகிறது என்பதில் எனக்கு அதன் மேல் கொஞ்சம் கோபம் கூட இருந்ததுண்டு..

வருடங்கள் செல்ல செல்ல அதன் இருப்பின் விலாசம் கொஞ்சம் கொஞ்சமாய் காலத்திற்கேட்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது...நடந்துபோகும் சிலருக்கு நிழல் குடையாய், மழை பெய்யும் நேரங்களில் ஒதுங்க இடமாய் எனக்கு விவரம் தெரிந்தபோது இருந்த அது. மொட்டை வெயிலில் ஒன்றுக்கு என்று அந்த வழியில் போவோர் வருவோர் அனைவரின் அவசரத்தை கழிக்கும் இடமாய் உருமாறியபோது கொஞ்சம் வருத்தமாய் இருந்தது.

பின்னர் காவல்காரர்களுக்கு பணம் வசூலிக்கும் சுங்கமாய் நான் மோட்டார் வண்டி ஓட்ட கற்ற காலங்களில் என்னை கொஞ்சம் துன்புறுத்தியது. விவரம் தெரிந்த போது விடலைகளுக்கு தண்ணி அடிக்கும் புகலிடமாய் அது புது உருவெடுத்தபோது நான் கூட கொஞ்சம் வியந்துதான் போனேன் அதை பார்த்து..பின்னர் இளநி/பதனி விற்கும் கடையாய் ஒரு பக்கமும், தர்பூசணிகள் தற்காலிகமாக தங்கும் இடமுமாய் மறுபக்கமும் போன வருடம் உருவெடுத்த போது கொஞ்சம் வித்தியாசமாய், ஆனால் அழகாய் தான் இருந்தது.

கடந்த வாரம் எதோ விஷயமாய் அந்த பக்கம் நான் போக; ஆலம்விழுதுக்கு மஞ்சள் ஆடை உடுத்தி, பொட்டிட்டு பூவைத்து மாலையிட்டு மக்கள் கொஞ்சம் பேர் பயபக்தியுடன் பொங்கல் வைப்பதை பார்த்தவுடன் திகைத்து தான் போனேன் நான்..

இப்படி உருமாறும் ஒரு மரத்தை நான் வேறுங்கும் கண்டதில்லை..நம்பிக்கை இருக்கிறது எனக்கு; மறுபடியும் உருமாறும் இந்த ஆலமரம் ..


Thursday, June 4, 2015

ஆட்டுக்கு வயசாயிடுச்சு

ஒரு பதினைந்து ஆண்டுகள் இருக்கலாம், ஞாயிற்று கிழமையாக தான் இருக்கும் கண்டிப்பாக. அவ்வளவாக போக்குவரத்து கிராமங்களை இணைக்காத  காலம். சிற்றுந்து என்ற வார்த்தை தமிழில் வடிவமைக்கபடாத நேரம் அது. மோட்டார்சைக்கிள்கள் சாலைகளை ஆக்கிரமிக்காத, மாட்டு வண்டிகள் உயிரோடிருக்கு போராடி கொண்டிருந்த அந்த கடைசி சில வருடங்களில் இதுவும் ஒன்று.ஆடி அசைந்து வரும் அந்த அரசாங்க பேருந்துகளுக்காக மக்கள் காத்து கிடந்த நேரங்கள் அவை.

 43ஈ -17 கடையம் - ஸ்ரீனிவாசா - எவிஆர்எம்வி - கணபதி என அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கால அட்டவணையை மனக்கணக்கில் வைத்துகொண்டு இரு பேருந்து வந்து போகும் இடைவெளியில் கடை தெருவில் துணி எடுக்கவும், கல்யாண வீட்டுக்கு சீர் செய்யவும், துக்க வீட்டுக்கு விசாரிக்க செல்லவும் என்று தங்கள் வீட்டு உறவுகள் தொடர்வதையும், தங்கள் தேவைகளையும்  மக்கள் பூர்த்தி செய்த காலம். 

எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும். ஞாயிற்று கிழமைகள் விடுமுறை என்பதை விட தாத்தா வீட்டுக்கு போகும் நாள் என்று சொல்லும் அளவில் ஒரு நடைமுறை எங்கள் வீட்டில்.காலை எட்டு மணிக்கு தாத்தா எங்கள் வீட்டில் ஆஜராவது வழக்கம். ஒரு சர்க்கரை இல்லாத காபி அல்லது பால்.ஒரு சின்ன பேச்சு "அப்புறம் கறி எடுக்க வந்தேன். சீக்கிரமா வந்திரு பிள்ளைகள கூட்டிகிட்டு" என்பதுடன் அந்த ஞாயிற்று கிழமை விருந்துக்கு அழைப்பது நிறைவு பெரும்.

ஞாயிற்று கிழமை 10 மணிக்குள் வீட்டில் இருந்து புறப்பாடு. ஒரு அரைமணி நேரமாவது காத்திருப்பு பேருந்துக்காக.. அப்போதெல்லாம் அது ஒரு பெரிய விஷயமல்ல.. இப்போது ஐந்து நிமிடமே யுகங்களாக தோன்றுகிறது..

ஒரு மூன்று கிலோமீட்டர் தாண்டி குளத்தங்கரையில் முதல் நிறுத்தம். அங்கே தான் இறங்குவோம்.ஊர் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். மழை பெய்யும் காலங்களில் குளத்தின் மறுகால் ரோட்டோரோமாக ஓடும். அந்த தெளிந்த நீரில் காலை நனைப்பதில் ஒரு சந்தோசம்.  அதில் அரட்டளை பார்த்தால் இன்னும் ஒரு குதுகலிப்பு. ஒரு பக்கம் குளம் இன்னொரு பக்கம் வயக்காடு,அப்புறம் மத்தியான வெயில் தெரியாத மாதிரி நல்ல காத்து. தாத்தா வீட்டுக்கு போனால் அங்கே சித்தி பிள்ளைகள், தின்பண்டம், ஊஞ்சல், பசு மாடு, கோழிக்கறி இப்படி நேரம் போக ஒரு ஐஞ்சு மணி வாக்கிலே ஊர் திரும்பல்.அன்றும் அப்படித்தான். ஆனால் அன்று மேகம் மப்பும் மந்தாரமுமாய் இருக்கவே அவசர அவசரமாக  பேருந்து பிடிக்க வேண்டும் என்ற எத்தனிப்பு.

மாடசாமி கோவிலுக்குள் நுழைந்து, கோயில் தோட்டம்  வழியாக பழைய பால் பண்ணையை கடந்த போது வரப்பின் இரு பக்கங்களிலும் செம்மறி ஆடுகள் செத்து கிடந்தன. சில எதோ நோய் வாய் பட்டதால் தோல் உரிந்து கொப்பளங்களுடன் படுத்து கிடந்தன.தம்பி கேட்டான் முதல் கேள்வி என்றும் போல்.

 "இந்த ஆடு எல்லாம் ஏனம்மா இப்படி இருக்கது? " 

அவனுக்கு என்ன ஒரு ஆறு வயசிருக்கும். 

"இந்த ஆடுகெல்லாம் வயசாயிடுச்சு.. அதான் செத்து போகுது."இது அம்மாவின் பதில்.

நான் அம்மா முகத்தை பார்கிறேன். எனக்கு தெரியும்  அது பொய் என்று. அவன் தொனதொனப்பு நிற்பதில்லை என்பதனால் இது ஒரு மந்திரம். அவன் கேள்வி மேல் கேள்வி கேட்பவன் ஆயிற்றே என்று 'இந்த பொய் - இந்த பதில்'. ஆனால் அவன் கேள்விகள் என்றும் நிற்பதில்லை.. ஒன்றன் பின் ஒன்றாக வந்து கேள்வி மேல் கேள்வி, பதிலில் இருந்து கேள்வி என நீண்டு கொண்டே போகும்.விடுவானா அவன் இன்று மட்டும்.

ஒரு பத்து அடி தூரம் போயிருப்போம். அங்கே இரண்டு செம்மறி ஆடுகள் சண்டை போட்டு கொண்டிருந்தன.

"இதுங்களுக்கும் அப்போ வயசான செத்துடுமா? " என்ற அடுத்த கேள்வி.. "ஆமா டா.இதுங்களுக்கும் வயசான செத்துடும்"

குளத்தங்ககரையை பிடித்தாயிற்று. ஒன்றிரண்டு தூறல் விழுகிறது. வேகமா நடக்கிறோம்.அப்போது ஒரு தாத்தா ஒரு இருபது ஆடுகளுடன் எங்களை எதிர்த்து நடந்து வருகிறார். ஆடுகள் எங்களை கடக்கின்றன. 

"அப்போ இந்த ஆடு எல்லாம் கூட வயசான செத்துடுமா?" 

அம்மாவுக்கு ஒரு பயம் எங்கே ஆட்டுக்காரர் காதில் கேட்டு விடுமோ என்று. 

"இந்த ஆட்டுகேல்லாம் இன்னும் வயசாகல.. இன்னும் ரொம்ப நாள் உயிரோட தான் இருக்கும்.." ஒரு வழியாய் பதில் சொல்லியாயிற்று.

ஆடுகள் எங்களை கடந்து விட்டன. ஆட்டுக்கார தாத்தா எங்களை பார்த்து சிரிக்கிறார்.

"நல்ல இருக்கியாம்மா? உன் பிள்ளைகளா.. நல்ல இருக்கட்டும்" என்ற அவரை பார்த்து "ஆமாம்" என்று அம்மா சொன்ன நேரம் அந்த கேள்வி வந்தது இவனிடம் இருந்து.

"அப்போ இந்த தாத்தாவுக்கு வயசாயிடுச்சுல்ல.. இவரு எப்போ அம்மா சாவாரு?" 

தூக்கி வாரி போட்டது எனக்கு.. என்ன சொல்ல வென்று அம்மா திகைக்க.. 

"அதுக்கு தான் கண்ணு நானும் காத்து கிட்டு இருக்கேன்.. வந்து தொலைய மாட்டேங்குது. உன் பையன் நல்லா கேள்வி கேக்குறான்" என்று அவர் சிரித்துகொண்டே பதில் சொல்லி போகிறார்.

ஆட்டுக்கு வயசாயிடுச்சு.....

Monday, June 1, 2015

என் பார்வையில் புது அர்த்தங்கள்

தாத்தா வீட்டில்  நிறைய புகைப்படங்கள் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் . அந்த வயதில் அவற்றை பற்றி ஒருநாளும் கேள்வி கேட்டதில்லை. அம்மாவும் அப்பாவும் திருமணம் முடிந்த சில நாட்களில் எடுத்த புகைப்படம் ஒன்று, அதன்பின் அதே போல் சித்தி சித்தப்பாவுடன் ஒன்று என நான் யூகித்துக் கொண்டவை சில. எனக்கு தெரியாத புகைப்படங்கள் பல.

நல்ல உயரத்தில் கொஞ்சம் முன் சாய்ந்தாற்ப்போல் நடுவே முகம் பார்க்கும் கண்ணாடி பதித்து இருபுறமும் புகைப்படம் இருக்கும் ஒரு பெரிய சட்டம் கீழே நின்று கண்ணாடியில் முகம் பார்க்கும்படியாய் ஒன்று உண்டு. வீட்டில் நுழையும்போது இரு பெரிய மரத்தூண்களிடையே நன்றாகத் தெரியும் அந்த புகைப்படம். ஒன்றில் கருப்புச்சட்டை வெள்ளைதாடியுடன் ஒரு உருவம் இருக்கும் கண்கள் பளிச்சென்று இருக்கும்.யாரென்று தெரியாது. முகம் கொஞ்சம் ஒன்றுபோல் இருக்க, தாத்தாவின் தாத்தாவாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.  குட்டி மீசையுடன் சிரித்துக் கொண்டிருக்கும் இன்னொன்றைஇறந்து போனதாய் சொல்லப்படும் சின்னதாத்தா என்று கொண்டேன்.

ஒரு நாள் புரிந்தது நான் பாட்டனாகக் கொண்டது உண்மையில் என் பாட்டன் அல்ல புதுத்தமிழனுக்கு பாட்டனான பெரியார் என்று, தாத்தாவின் தம்பி என நான் கொண்டது அனைவருக்கும் அண்ணனான அண்ணா என்று.. என் பார்வையில் புதிய அர்த்தங்கள் என்றும்!!