Wednesday, June 24, 2015

சில புன்னகைகளுக்கு உடனடி விடைகள் இருந்தால் கொஞ்சம் நன்றாயிருக்கும்

சென்னையில் மழை என்பதால் மூன்று மணி நேரத்துக்கு முன் வந்து சேர்ந்தாயிற்று விமான நிலையத்திற்கு.. தில்லிக்கு முதல் பயணம்..இராவணன் என்னை அழைக்கிறான்; இலங்கைக்கு போகும் பொருட்டு புத்தகத்தினுள் நுழைய முற்படுகிறேன்.. எதோ என்னை என் கனவுலகதினுள் நுழைய விடாமல் தடுக்கிறது...குபேரன் இலங்கையை விட்டு ஓடி விட்டான்; ஒரு வழியாய் இராவணன் இலங்கையை பிடித்துவிட்டான்.கையிலிருக்கும் அந்த புத்தகம் மேல் இருந்த அந்த ஆர்வத்தை எப்படியோ தொலைத்துவிட்டேன்..இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது என் விமானம் சென்னையில் இருந்து கிளம்ப. கொஞ்சம் சுற்றி முற்றி பார்க்கிறேன்.. கண்கள் வழக்கம் போல் தேடுகின்றன.

என் கண்கள் எட்டும் தூரம் வரை ஒன்றும் பசுமையாய் தெரியவில்லை. இன்னும் இரண்டு மணிநேரம் எப்படி போகும் என்பது எனக்கு புரியவில்லை.என் மூளை எழுத்துக்களை கிரகிக்க மறுக்கிறது.என்ன செய்வதென்று புரியவில்லை..  சில நேரங்கள் கொஞ்சம் விநோதமானவை; அன்று கூட அப்படித்தான். ஒரு ஐந்து நிமிடம் கழித்து கொஞ்சம் பசுமை தலை காட்டியது..எனக்கு எதிர்த்தால் போல் வந்தமர்ந்தபோது இன்றைய நாள் இனிதாக தொடங்கும் என்று விமான நிலையத்தினுள் நுழையும் போது எங்கோ கேட்டது ஞாபகத்தில் வந்து மறைந்தது..என்ன ஒரு வேகம், பிடித்த விஷயங்களில் மனம் வேகமாக முழ்குகிறது.. ஒரு அரைமணி நேரம் ஆகி இருக்கும், புத்தகத்தில் ஒரு பக்கம் கூட நகரவில்லை..இருந்தும், புத்தகத்தில் அடுத்த பக்கம் திருப்புகிறேன்.. அந்த பக்கத்தை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்...புத்தகம் என் கை மீறி எங்கும் போகாது என்ற எண்ணம் எனக்கு.

நேரம் போனது தெரியாது.. தில்லி செல்லும் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்தாயிற்று.. காற்றடைத்த அந்த இரும்பு கூட்டுக்குள் நுழைய மனம் இல்லை; என்ன செய்வது, வருத்ததுடன் புத்தகத்தை மூடுகிறேன்.. கொண்டுவந்த பையை தோளில் மாட்டியாயிற்று. மெல்ல எழுந்து அந்த விமானத்தில் ஏறும் வாசல் நோக்கி நடக்கிறேன்..கொஞ்சம் கூட்டம் அதனால் வரிசையில் நிற்கிறேன்...சின்ன சலனம் மனதில்; மறுபடி ஒருமுறை திரும்பி பார்த்தால் என்ன என்று.. மனது கேட்பதில்லை சில விஷயங்களில்.. திரும்பி பார்க்கிறேன் மெல்ல..அந்த ஒரு பார்வை, உடனடியாய் ஒரு புன்னகை தவழ்கிறது சிறுகுறும்புத்தனத்துடன்..நான் அதை கிரகிப்பதை கண்டுகொண்டவுடன் வேகமாய் ஓடி மறைகிறது..அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு புரியவில்லை. தெரியாத மனிதர்களிடம் இருந்து, நமக்கு பரிச்சயம் இல்லாத ஒரு புதிய இடத்தில், புரியாத வகையில் வரும் இது போன்ற சில புன்னகைகளுக்கு உடனடி விடைகள் இருந்தால் என்னை போன்ற மரமண்டைகளுக்கு வாழ்க்கை கொஞ்சம் நன்றாயிருக்கும்.

No comments:

Post a Comment