Monday, June 1, 2015

என் பார்வையில் புது அர்த்தங்கள்

தாத்தா வீட்டில்  நிறைய புகைப்படங்கள் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் . அந்த வயதில் அவற்றை பற்றி ஒருநாளும் கேள்வி கேட்டதில்லை. அம்மாவும் அப்பாவும் திருமணம் முடிந்த சில நாட்களில் எடுத்த புகைப்படம் ஒன்று, அதன்பின் அதே போல் சித்தி சித்தப்பாவுடன் ஒன்று என நான் யூகித்துக் கொண்டவை சில. எனக்கு தெரியாத புகைப்படங்கள் பல.

நல்ல உயரத்தில் கொஞ்சம் முன் சாய்ந்தாற்ப்போல் நடுவே முகம் பார்க்கும் கண்ணாடி பதித்து இருபுறமும் புகைப்படம் இருக்கும் ஒரு பெரிய சட்டம் கீழே நின்று கண்ணாடியில் முகம் பார்க்கும்படியாய் ஒன்று உண்டு. வீட்டில் நுழையும்போது இரு பெரிய மரத்தூண்களிடையே நன்றாகத் தெரியும் அந்த புகைப்படம். ஒன்றில் கருப்புச்சட்டை வெள்ளைதாடியுடன் ஒரு உருவம் இருக்கும் கண்கள் பளிச்சென்று இருக்கும்.யாரென்று தெரியாது. முகம் கொஞ்சம் ஒன்றுபோல் இருக்க, தாத்தாவின் தாத்தாவாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.  குட்டி மீசையுடன் சிரித்துக் கொண்டிருக்கும் இன்னொன்றைஇறந்து போனதாய் சொல்லப்படும் சின்னதாத்தா என்று கொண்டேன்.

ஒரு நாள் புரிந்தது நான் பாட்டனாகக் கொண்டது உண்மையில் என் பாட்டன் அல்ல புதுத்தமிழனுக்கு பாட்டனான பெரியார் என்று, தாத்தாவின் தம்பி என நான் கொண்டது அனைவருக்கும் அண்ணனான அண்ணா என்று.. என் பார்வையில் புதிய அர்த்தங்கள் என்றும்!!

No comments:

Post a Comment