Wednesday, May 13, 2015

ரயில்கள் கூடும் எக்மோர் ரயில் நிலையம்

அனல் காத்து, நல்ல வெயில், கையிலே ஒரு பிஸ்லேரி தண்ணீர் பாட்டில்,புழுங்கியதால் மணிகட்டை உறுத்தும் கைகடிகாரம், வேர்வையில் நனைந்த சட்டை, ஒரு ஞாயிறு மதியம், ரயில்கள் கூடும் எக்மோர் ரயில் நிலையம் இவற்றுகிடையில் நான்..இதுவே கதை களம்..

கூகூ...கூகூஊன்...கூகூ...ஊன்...இந்த சப்தம்.. இருந்த சப்தங்களை அவ்வப்போது தன்னுள் வாரிபோட்டு கொண்டது..தடக் தடக் என்ற ஒலி ஒரு அழகான இசை போல ஒருசேர்ந்து கேட்க.. அவ்வப்போது தடக் தட்தட்தட் என கொஞ்சம் பிரச்சனை பண்ண..ஒரு சின்ன சலனம் நெஞ்சில் எழுந்து உடன் மறைவது போல இந்த ஓசையும் பின்னர் காணாமல் போனது....இந்த எக்மோர் ரயில் நிலையம் ரொம்ப மாறவில்லை நான் பார்த்த இந்த எட்டு ஆண்டுகளில்..ஆனால் நான் முதலில் பார்த்தபடியும் இல்லை. மாற்றங்களை தனதுடையதாக்கி தன்மை மாறாமல் இருக்கும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

இவ்வாறான இடத்தில மக்கள் வேகமாய் தங்கள் உடமைகளை தூக்கி கொண்டு ஓடும் அந்த நடை பாதையில் ஒரு உருவம்.. கிழ உருவம்தான்....மல்லாக்க படுத்திருக்கிறது....ஒரு எண்பது வயதிருக்கலாம்.. மேல் சட்டையில்லை.. இடுப்பில் வெட்டி.. இடையில் ஒரு துண்டு... சவரம் செய்து பல மாதம் ஆன ஒரு முகம்.. வெள்ளை முடி அதில்  கொஞ்சம் கருப்பு இன்னும் மிச்சமிருக்கிறது.ஒரு பத்து பதினைந்து ஈக்கள் மொய்க்க கொஞ்சம் கூட சலனமில்லாமல் ஒரு தூக்கம் அந்த ஆளுக்கு..கோபம் பொத்துகொண்டு வந்ததது எனக்கு இருந்தாலும் ஒரு புறம் அந்த ஆளின் அந்த நிம்மதியான தூக்கத்தை நினைத்து ஒரு வகையில் கொஞ்சம்  பொறாமையும் கூட..தூக்கம் அவரின் ஒரே சொத்தாக கூட இருக்கலாம் என்று நினைத்து கொண்டேன்..

ஒரு காலத்தில் எக்மோரை  பார்த்து பிரமித்தது உண்டு..உயர்ந்த கட்டடம்..சிவப்பு சுவர்கள்... விரிந்த கூரை..அகண்ட நடைமேடைகள்,அந்த மர படிகட்டுகள் என.. கொஞ்சம் சிலிர்ப்பூட்டிய  இடம்தான்.. பின்னர் கொஞ்ச நாளில் பழகி போய்விட்டது..அதன் பின் ரொம்ப அலட்டிகொண்டதில்லை இந்த இடத்தை பற்றி..மனிதர்கள் கூட இப்படித்தான்.. முதல் சந்திப்பில் எப்போதுமே ஒரு பிரம்மாண்டம்.. பின்னர் பழகி போன பின் அந்த பிரம்மாண்டம் தெரிவதில்லை.. ஆனால் பிரிந்து சென்று சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது தெரியும் ஒரு பிணைப்பு....இன்று என்னவோ கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறது.. எனக்குள் இந்த இடத்துடன் ஒரு தொடர்பு இருக்கிறதென்று.. எதோ என்னுடையது என்ற ஒரு பந்தம் புலப்படுகிறது..அரசாங்க சொத்தில் ஆசை படுபவன் என்று நீங்கள் எடுத்து கொண்டாலும் நான் அதை பற்றி கவலை கொள்ள போவதில்லை இந்த விஷயத்தில்...இவ்வாறு நான் என் நினைவுகளையும் மற்றும் பல தேவையற்ற விஷயங்களையும் கிழ மாடு போல மெல்ல அசை போட்டுகொண்டிருக்கும் போதுதான் மறுபடியும் என் கண்ணில் பட்டது அந்த உருவம்..

அதே உருவம் தான்.. கொஞ்சம் கூட அசைந்தபாடில்லை.. அப்படியே.. அத்தனை சத்தங்களின் நடுவிலே.. ஒரு நொடியில் மனம் திக்கென்றது.. ஒரு வேளை.. அப்படியிருக்கலாமோ.. ஆம் கொஞ்சம் கூட அசைவில்லை..கூர்ந்து கவனிக்கிறேன்.. நெஞ்சு கூட்டில் ஒரு ஏற்ற இறக்கம்?? ஊஹும்.. ஒன்றும் இல்லை..வயிறு உப்பி பின் தன்னிலை அடைகிறதா என்று கூட கவனிக்கிறேன்.. ஒன்றும் இல்லை..இத்தனை ஈக்கள் மொய்த்தும் கொஞ்சம் கூட உடலில் ஒரு உணர்ச்சி இல்லையென்றால்.. என்னவோ.. மனம் பதறுகிறது.. கண்டுகொள்ளாமல் இருந்து விட்டால் என்ன? நாம் மட்டுமா இங்கு இருக்கிறோம்?  அனைவரும் தத்தம் வேலைகளில் உள்ளபடி நானும் இருந்தால் என்ன? சுற்றும் முற்றும் கவனிக்கிறேன் இப்போது.. வேறு எவராவது கவனிக்கிறார்களா என்று... எனக்கு அடுத்த பெஞ்சில் அமர்திருக்கும் ஒரு நாற்பது வயது சக பயணியும் என்னை போல் கூர்ந்து நோக்கி கொண்டிருக்கிறார்..ஒரு வகையில் மனதுக்கு சந்தோசம்..தம்பி உயிர் இல்லையோ ஒரு வேளை என்று அந்த பெண்மணி என்னை பார்த்து கேட்டதும் தூக்கி போட்டது எனக்கு..என்னை கவனித்திருக்க வேண்டும். நான் குற்றம் செய்யவில்லை என்ற போதும் எதோ நான் எதோ தவறு செய்து மாட்டிகொண்ட ஒரு பயம் எனக்கு..நாக்கு பிறழ்கிறது.. பயம் தொற்றிகொள்கிறது.. இந்த ஜனகூட்டதின் நடுவே இந்த உடல் என்னை பதற வைக்கிறது..

தெரியவில்லை என்று நான் சொல்ல துவங்கும் நேரம் அந்த கிழவன் தன் கையை எடுத்து இடுப்பில் சொரிய.. அந்த பெண்மணி சிரிக்கிறார் சத்தமாய்.. என்னை அறியாமல் ஒரு புன்னகை என் இதழ்களில்..நம்ம வருத்தமில்லாமல் ரயில் ஏறலாம் தம்பி... கொஞ்சம் கவலையாய்தான் இருந்தது என்று அந்த அம்மா சொல்லும்போதுதான்  என் மனம் அமைதியாகிறது....

கூகூ...கூகூஊன்...கூகூ...ஊன்....தடக் தடக்..என அடுத்த ரயில் வண்டி புறப்பட தயாராகிறது..நான் என் வண்டிக்காக காத்திருக்கிறேன்... 


No comments:

Post a Comment